தமிழக விரைவு பஸ்கள் இனி பம்பை வரை செல்லும்: நவ., 15 முதல் - ஜன., 18 வரை ஏற்பாடு
தமிழக விரைவு பஸ்கள் இனி பம்பை வரை செல்லும்: நவ., 15 முதல் - ஜன., 18 வரை ஏற்பாடு
ADDED : நவ 13, 2024 06:40 AM

மதுரை : சபரிமலை சீசனையொட்டி தமிழகத்தில் இருந்து அரசு விரைவு பஸ்கள் பம்பை வரை செல்ல இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை வரை கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆந்திரா, கர்நாடக பக்தர்களும் பலர் தமிழகம் வந்து செல்கின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சபரிமலை சீசன் காலத்தில் அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு செல்லும் பஸ்கள் நிலக்கல் என்ற இடம் வரையே செல்லும். அங்கிருந்து பம்பை வரை 18 கி.மீ., தொலைவுக்கு கேரள அரசு பஸ்களில் செல்ல வேண்டும். அதிகளவு பக்தர்கள் செல்வதால் பஸ்கள் மாறிச் செல்வதில் சிரமம் இருந்தது. கடந்தாண்டு வரை இந்நிலை இருந்தது.இந்தாண்டு பம்பை வரை தமிழக அரசு விரைவு போக்குவரத்து பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்பாட்டில் பம்பை வரை பஸ்களை இயக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் கூறியுள்ளதாவது: மதுரையில் இருந்து நாளை மறுநாள் (நவ.15) முதல் 2025, ஜன.18 வரை தினமும் அதிநவீன மிதவை பஸ் (அல்ட்ரா டீலக்ஸ்) இயக்கப்பட உள்ளது. தினமும் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு தேனி வழியாக பம்பைக்கு இயக்கப்படும். சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 மாலை 5:00 மணி வரை கோவில் நடை சாத்தப்பட உள்ளது. எனவே அந்நாட்களில் மட்டும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.
இந்த சிறப்பு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக 'ஆன்லைன்' மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC யின் அதிகார பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் விபரம் உள்ளிட்ட தகவல்களுக்கு 94450-14426 ல் தொடர்பு கொள்ளலாம்.

