ADDED : ஏப் 06, 2025 12:54 AM

சென்னை:'முருங்கை இலை சாகுபடி வாயிலாக, நிலையான வருமானம் பெற விருப்பம் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்' என, தமிழக அரசின் டி.என்.ஏபெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அழகுசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்திற்கு, பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஆண்டுக்கு, 200 டன் முருங்கை இலை பொடிக்கு தேவையான சந்தை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுகோள் வந்துள்ளது. இந்த வாய்ப்பு, டி.என்.ஏபெக்ஸ், தனியார் நிறுவனம், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுத்தப்படும்.
முருங்கை இலை சாகுபடி வாயிலாக சந்தை வாய்ப்பு பெற்று, நிலையான வருமானம் பெற, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

