தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
ADDED : மார் 14, 2025 04:22 PM

சென்னை: ''மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள் தான் தமிழகத்தின் கடன் உள்ளது.'' என தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் கூறினார்.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நிருபர்களிடம் பேசிய உதயசந்திரன் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்திற்கு தமிழகம் 9 சதவீதம் பங்களிப்பு அளித்து வருகிறது. வருவாய் பற்றாக்குறையை பொறுத்த வரை கோவிட் காலத்தில் அதிகமாக இருந்தது. பிறகு குறைந்து கொண்டே வந்தது. 2025-26ம் ஆண்டு 1.17 சதவீதமாக உள்ளது. 2024- 25 பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 49 ஆயிரம்கோடியாக இருக்கும் என திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு 3 ஆயிரம் கோடி ரூபாய் குறைத்து உள்ளோம். அடுத்த ஆண்டு 41 ஆயிரம் கோடியாக குறையும். மத்திய அரசிடம் இருந்து பல நலத்திட்ட உதவிகள் வராமலேயே வருவாய் பற்றாக்குறையை 41 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளோம். அது வந்து இருந்தால், இன்னும் குறைத்து இருப்போம்.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த உள்ளோம். மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள் தான் தமிழக அரசின் கடன் உள்ளது. போக்குவரத்து வாகனங்கள் விற்பனையில் வளர்ச்சி இருந்தது. நான்கு சக்கர வாகன விற்பனையில் டிச.,வரை குறைவாக இருந்த விற்பனை பிறகு மாறியது.
பொருளாதார ரீதியில் மோசமான அளவுக்கு கடன் வாங்கவில்லை. நடுவில் தான் இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் நிதி மேலாண்மை செய்யப்படுகிறது. திட்டங்களுக்கு எப்போது நிதி தேவையோ அப்போது விடுவிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசில் இருந்து துறைகளுக்கு விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த நிதியை திருப்பி எடுத்துள்ளோம்.
சென்ற ஆண்டு 3,600 கோடி ரூபாய் குறைவாக கடன் வாங்கினோம். வரும் ஆண்டு திட்டமிட்டதைவிட 7 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக கடன் வாங்க உள்ளோம். இந்த ஆண்டு ரூ.1.05 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளோம். தமிழக அரசுக்கு ரூ. 8 முதல் 9 லட்சம் கோடி வரை கடன் உள்ளது. இவ்வாறு உதயச்சந்திரன் கூறியுள்ளார்.