புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்யும் நடைமுறை துவக்கம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்யும் நடைமுறை துவக்கம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ADDED : ஆக 15, 2025 12:42 AM
மதுரை:தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆக., 31ல் பணி ஓய்வு பெறுவதால், அப்பணியிடத்திற்கு வேறொருவரை தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வழக்கறிஞர் யாசர் அராபத் தாக்கல் செய்த பொதுநல மனு:
டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆக., 31ல் பணி ஓய்வு பெறுகிறார். அப்பதவியில் வேறொருவரை நியமிக்க தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு முன் பரிந்துரைத்திருக்க வேண்டும்.
தற்போது வரை பட்டியலை அனுப்பவில்லை. சங்கர் ஜிவால் பணி நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது ஒருவரை பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்க வாய்ப்புள்ளது. அது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.
தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் நடைபெற உள்ளது. தங்களுக்கு சாதகமான அதிகாரியை டி.ஜி.பி., பொறுப்பில் வைத்துக்கொள்ள மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது. ஆணவக்கொலை, குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட டி.ஜி.பி., நியமனத்தை முறையாக மேற்கொள்வது அவசியம்.
சங்கர் ஜிவாலுக்கு பணி நீட்டிப்பு செய்ய அல்லது பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்க தடை விதிக்க வேண்டும். டி.ஜி.பி., பதவிக்கு தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று காலை, 11:40 மணிக்கு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜேஸ்வரன் ஆஜரானார்.
தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: இதுபோன்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை.
நீதிபதிகள்: இதுபோன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஆக., 4ம் தேதியே, இவ்வழக்கு இங்கு விசாரணைக்கு வந்ததை ஏன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை.
புது டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறை துவங்கியுள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக உள்துறை செயலரிடம் விபரம் பெற்று மதியம், 2:15 மணிக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மீண்டும் மதியம் 2:15 மணிக்கு விசாரிக்கப்பட்டது.
ஏ.ஏ.ஜி., அஜ்மல்கான்: புது டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறை துவங்கி நடந்து வருகிறது என, உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
நீதி பதிகள்: டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக முன்கூட்டியே வழக்கு தாக்கல் செய்ததாகக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பி றப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்ற உத் தரவு மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒற்றைச்சாளர முறையில் டி.ஜி.பி.,யை தேர்வு செய்து நியமனம் மேற்கொள்ள வேண்டும். இதில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும்.
தற்போது புது டி.ஜி.பி.,யை நியமிப்பதற்கான தேர்வு நடைமுறைகள் துவங்கியுள்ள சூழலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும், நீதிபதிகள், 'டி.ஜி.பி., நியமனத்தில் ஏதேனும் விதிமீறல் இருக்கும்பட்சத்தில் மனு செய்து நிவாரணம் தேடலாம்' என, கருத்து வெளியிட்டனர்.