உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் தமிழக அரசு: அமைச்சர் சிவசங்கர்
உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் தமிழக அரசு: அமைச்சர் சிவசங்கர்
ADDED : டிச 17, 2025 11:48 AM

வேலூர்: தமிழக அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடங்கியது. இதில், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது: நானோ தொழில்நுட்பம் வெறும் அறிவியல் துறை அல்ல. அது ஒரு புரட்சி. குவாண்டம் புள்ளிகள் போன்றவை 1 முதல் 10 நானோமீட்டர் அளவில் இருப்பதால், மனித ரோமத்தின் விட்டத்தைவிட 10,000 மடங்கு சிறிய அளவை கொண்டதாகும். இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளப் பொருள்களை வடிவமைக்க உதவுகிறது.
ஜிடிபி.,யில் 2ம் இடம்
நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் வரும்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும். இந்த அரசு சமூக நீதியைப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை மாற்றியமைத்துள்ளது. சமூக நீதி, உள்ளடக்கம் மற்றும் மனித மூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, தமிழகத்தை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2ம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொருளாதார வளர்ச்சி உள்ளடக்கமானதாகவும் அறிவு சார்ந்ததாகவும் இருந்தாலே நிலையானது.
இந்த அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும். குறிப்பாக பாலின சமத்துவமின்மையை எதிர்கொள்ளும். நானோ தொழில்நுட்பமானது திறன்மிகு பேட்டரிகள், நீடித்த சூரிய தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளுக்கு முக்கியப் பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசியதாவது: நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 நாடுகளில் இருந்து 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்ட பல தலைப்புகளை உள்ளடக்கியது.
7வது இடம்
அதேபோல 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் சிறப்பம்சமாக, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் வெளியான க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் விஐடி 7-ம் இடம் பிடித்துள்ளது. உலகளவில் 352-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த தரவரிசையில் உயர வேண்டும் என்பது இலக்காகக் கொண்டுள்ளோம்.
ஒரு நாடு முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் உயர்கல்வி மூலமே முடியும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் கல்வியை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். சுகாதாரமும் கல்வியும் மத்திய, மாநில அரசுகளுக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

