ADDED : ஜன 22, 2025 12:50 AM

சென்னை:''தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்திற்கு பெண்களை கல்வி பயில அனுப்பும் வடகிழக்கு மாநில பெற்றோர்கள், டில்லியை பாதுகாப்பாக உணர்வதில்லை,'' என, கவர்னர் ரவி பேசினார்.
இந்தியாவில் உள்ள, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழா நேற்று, சென்னை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.
மணிப்பூர் கவர்னர் அஜய்குமார் பல்லா, மேகாலயா கவர்னர் விஜயசங்கர் ஆகியோர், காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
விஷ விதை
கவர்னர் ரவி பேசியதாவது:
நாட்டின் உயர்ந்த கலாசாரத்தை மறந்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பும், மற்ற மாநிலங்களுக்கு தெரியவில்லை. தமிழகத்தில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, சவுராஷ்டிரா, குஜராத்தி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கூட, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
மாநிலங்களின் தினத்தை, அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளே மட்டும் கொண்டாடுவதால், அவர்கள் மட்டுமே தெரிந்து கொள்கின்றனர். அந்த மாநிலத்தின் கலாசாரம் பிற மாநிலங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால், அனைத்து மாநிலங்களும் கொண்டாட வேண்டும் என்கிறார், பிரதமர் மோடி.
மணிப்பூரில் நடக்கும் பிரச்னையை பார்க்கும் போது, எனக்கு தோன்றும் கேள்வி எல்லாம், சுதந்திரத்துக்கு முன் இந்த பிரச்னை இல்லையே; இப்போது எப்படி வந்தது என்பதுதான்.
பிரிட்டிஷ் ஆட்சியில், அவர்களது மனதில் இந்த மனிதர்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ற விஷ விதையை புதைத்து வைத்துள்ளனர். பிரிட்டிஷ் அரசு தான் பழங்குடிகள், நகரவாசிகள் என, அவர்களை பிரித்து, வித்தியாசத்தை விதைத்தது.
நாட்டின் வளர்ச்சி, அதி தீவிர முன்னேற்றத்தில் இருந்து பழங்குடிகள் ஒதுக்கி வைக்கப்பட்டதால், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போனது. அரசியல்படுத்தப்படாத மக்களால், இந்த வித்தியாசத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒன்றுசேர்ந்து தங்களை காத்துக் கொள்கிறோம் என்ற பெயரில் சண்டையிட்டு வருகின்றனர்.
மகிழ்ச்சி
மணிப்பூரில் சில ஆண்டுகளாக அமைதி நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சண்டை, சச்சரவு என நிலவிய வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைகள் ஒழிந்து, இப்போது 'செமி கண்டக்டர்' தொழிற்சாலைகள் வரும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மகா கும்பமேளா நிகழ்வில், தினமும் பல கோடி மக்கள் ஒன்றிணைகிறார்கள். ஒற்றுமையின் அடையாளமாக மகா கும்பமேளா நடந்து வருகிறது.
அங்கு யாரும், யாரையும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை பார்ப்பதில்லை.
தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. பொதுவாகவே தமிழகத்திற்கு பெண்களை கல்வி பயில அனுப்பும் வடகிழக்கு மாநில பெற்றோர்கள், டில்லியை பாதுகாப்பாக உணர்வதில்லை. இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கான விருந்தோம்பல் சிறப்பாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.