மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
ADDED : பிப் 02, 2026 03:32 AM

காரியாபட்டி: ''மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்,'' என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026-- 2027 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழகத்திற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது.
எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழகம் எப்போதும் வஞ்சிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

