'செமிகண்டக்டர்' தொழிற்சாலை தவறவிட்டது தமிழகம்: பன்னீர்
'செமிகண்டக்டர்' தொழிற்சாலை தவறவிட்டது தமிழகம்: பன்னீர்
ADDED : மே 25, 2025 03:45 AM
சென்னை: 'செமிகண்டக்டர் தொழிற்சாலை தமிழகத்தில் அமைவதை தி.மு.க., அரசு தவறவிட்டுள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்' எனும் ஐந்தாண்டு திட்டம், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உலக அளவில் தலைசிறந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் மையங்களை, கோவை சூலுார் மற்றும் பல்லடம் பகுதிகளில் அமைக்கும் என குறிப்பிட்டிருந்தன.
ஏற்கனவே, அமெரிக்காவை சேர்ந்த, 'கேரியர் குளோபல்' நிறுவனம் 1,000 கோடி ரூபாய்; எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஆந்திர மாநில அரசின் துரித நடவடிக்கையால், அந்த முதலீடுகள் அங்கு சென்று விட்டன.
இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு வர வேண்டிய செமிகண்டக்டர் தொழிற்சாலை, உத்தர பிரதேசத்திற்கு சென்றிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. இதன் விளைவாக, அரசுக்கு வர வேண்டிய வருவாய் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை தமிழகம் இழந்திருப்பதற்காக, தி.மு.க., அரசை கண்டிக்கிறேன்.
தொழில்கள் வளர வேண்டும்; தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அடுத்த செமிகண்டக்டர் தொழிற்சாலையை, தமிழகத்தில் அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.