ADDED : டிச 20, 2024 08:08 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அளித்த பேட்டி:
பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கக்கூடிய குழுவில், மூன்று நபர்களை முறையாக, அரசு மற்றும் பல்கலையின் விதிப்படிதான் நியமித்தோம்.
உயர் கல்வியை பொருத்தவரை, பல்கலைக் கழக பேராசிரியர்கள், மாணவர்கள் நலன் காப்பதில் அக்கறையுடன் தமிழக அரசு செயல்படுகிறது.
கருணாநிதி காலத்திலிருந்து இன்று வரை உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழக என்ற நிலையை அடைவதற்கு காரணம், மாணவர்கள் நலனில் தமிழக அரசு காட்டி வரும் அக்கறைதான்.
இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், கவர்னர் உயர்கல்வி துறையின் பணிகளில் குறுக்கிட்டு, இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகிறார். அதற்காகவே, தினமும் கருத்து சொல்கிறார். கவர்னர் தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு சொன்னதற்கான காரணம் இதுதான்.
இதன்பின்பும், கவர்னர் தன் நிலையை இப்படியே தொடர்ந்தால், தமிழக முதல்வருடன் கலந்துபேசி, தக்க பதில் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியிலான அவருடைய செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த சூழ்நிலையை, கவர்னர் எட்டாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு.
தொடர்ந்து, வரும் ஜூன் மாதத்திற்குள் 4 ஆயிரம் பணியிடங்களுக்கு, பேராசிரியர்களை நியமிக்க பெரு முயற்சி எடுத்து வருகிறோம். அதற்கான ஆலோசனைகளை முதல்வர் வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

