சட்டசபை தேர்தல் ஆலோசனை: தமிழக அதிகாரிகளுக்கு அழைப்பு
சட்டசபை தேர்தல் ஆலோசனை: தமிழக அதிகாரிகளுக்கு அழைப்பு
UPDATED : ஜன 28, 2026 10:12 PM
ADDED : ஜன 28, 2026 09:47 PM

சென்னை: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தமிழக அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், தற்போதுள்ள அரசின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதையொட்டி, இம்மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தும் பணிகளில், தேர்தல் கமிஷன் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில், கடந்த 2021, ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இம்முறை முன்கூட்டியே, சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பிப்ரவரி இறுதியில், தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து, பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதிகளில், இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள், டில்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், உள்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

