உழவார பணி கண்காணிக்க குழு ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
உழவார பணி கண்காணிக்க குழு ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ADDED : மார் 06, 2024 11:59 PM
சென்னை:'தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் மேற்கொள்ளும் உழவாரப் பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக உயர்மட்ட அலுவலர்களை கொண்ட நிலையான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 'பழமையான, பாரம்பரியம் மிக்க கோவில்களில், துாய்மைப் பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள, அனுமதி மறுக்கப்படுகிறது' எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, 'மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில், உழவாரப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை வகுக்க வேண்டும்.
'மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., - பி.டி.ஓ.,க்களில் யாராவது ஒருவர் தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி, மாநிலத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களின் தற்போதைய நிலை குறித்த விபர அறிக்கையை, அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, மீண்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.
''நீதிமன்ற உத்தரவின்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், பழமையான சைவ கோவில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக, தனித்தனியாக உயர் மட்ட அலுவலர்களைக் கொண்ட நிலையான ஆலோசனைக் குழு, முதல் கட்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.
''இக்குழுவில், அறநிலையத்துறை இணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனர் தலைவராகவும், திருக்கோவில்கள் வட்டாட்சியர், தொல்லியல் துறை வல்லுனர், உதவி ஸ்தபதி, அறநிலையத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்,'' என, அருண் நடராஜன் கேட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 'கோவில்களில் மேற்கொள்ளும் உழவாரப் பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு, அங்குள்ள கோவில்களின் நிலையை ஆய்வு செய்து, மூன்று வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
ஐகோர்ட் வலியுறுத்தல்
'சிதம்பரம் நடராஜர் கோவிலில், அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, ''நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி, கோவிலுக்குள் எந்த விதமான கட்டுமானங்களையும் தொடரவோ அல்லது ஏற்கனவே உள்ள கட்டுமானங்களை மாற்றவோ கூடாது' என, மீண்டும் பொது தீட்சிதர் குழுவுக்கு அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

