நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் முதலிடம்!
நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் முதலிடம்!
ADDED : ஜன 06, 2025 09:17 PM

சென்னை: நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் முதலிடம் என்று தமிழக அரசு பெருமிதத்துடன் கூறி உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். மனித வளங்களை வளர்ப்பதில் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட தமிழகம் மாபெரும் சாதனை. தமிழகம் 8,42,720 மனித உழைப்பு நாள்களை கொண்டு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடம் பெற்றுள்ளது.
மஹாராஷ்டிரா 7,29,123 மனித உழைப்பு நாள்களை கொண்டு 2வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலம் 7,21,586 மனித உழைப்பு நாள்களை கொண்டு 3-ம் இடத்தில் உள்ளது.
ரிசர்வ் வங்கியின் 2023 24ம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் இந்த விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 39,699 சிறு குறு தொழில்கள் உள்ளன. இவை 4,81,807 தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது.
இதன் மூலம் தமிழகம் 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் (Man-days) கொண்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் 26,446 தொழிற்சாலைகள் உள்ளன. 6.45,222 தொழிலாளிகள் உள்ளனர்.
இம்மாநிலம் 7,29,123 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 31,031 தொழிற்சாலைகள் உள்ளன. 5,28,200 தொழிலாளிகள் உள்ளனர்.
இம்மாநிலம் 7.21,586 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல் அதிகளவில் உற்பத்திகள் செய்தல் ஆகியவற்றில் மனித உழைப்பு நாள்களில் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கோவிட் 19 காலத்தில் கதவடைப்பு முதலிய இடர்ப்பாடுகளால் தொழில்களும் வேலை வாய்ப்புகளும் குறைந்த நிலையை இந்த அரசு பொறுப்பேற்ற பின் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு சீர்ப்படுத்தி வளர்ச்சியில் இன்று நல்ல முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது.
இந்த அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளதுடன் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்து சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது.
இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழகம் 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் கொண்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகம் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.75 மனித உழைப்பு நாள்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மஹாராஷ்டிரா ஒரு தொழிலாளிக்கு 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும். குஜராத் ஒரு தொழிலாளிக்கு 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன.
இந்தப் புள்ளி விவரங்கள் மற்ற இரண்டு மாநிலங்களை விட தமிழகம் வேலை வாய்ப்புகளை அதிகரித்து உழைப்பாளிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தியுள்ளது என்ற உண்மையைப் புலப்படுத்துகின்றன. அதேபோல பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம். மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மனித உழைப்பு நாள்கள், தொழிலாளிகள் இடையே பெரிய வேறுபாடு காணப்படுவதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

