காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழர்கள் பத்திரமாக ஊருக்கு திரும்பினர்
காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழர்கள் பத்திரமாக ஊருக்கு திரும்பினர்
ADDED : ஏப் 25, 2025 01:19 AM

சென்னை:ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், 27 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, அம்மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற, தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி நேற்று, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், விமானம் வாயிலாக சென்னை திரும்பினர்.
அவர்கள் அளித்த பேட்டி;
கடந்த, 19ம் தேதி சுற்றுலாவுக்காக, 70 பேர் குழுவாக காஷ்மீர் சென்றோம். முதல் இரண்டு நாட்கள், பல இடங்களுக்கு சென்று, சுற்றி பார்த்து வந்தோம். பஹல்காம் பகுதியில் உள்ள, ஏ.பி.சி., பாயின்ட் பகுதியை பார்க்க செல்வதாக இருந்தோம்.
எங்களுடன் வந்த 20 பேர், ஏ.பி.சி., பாயின்ட் சென்றனர். சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் திடீரென பதற்றமாக பேசினார். 'அங்கே செல்ல வேண்டாம்' என்றார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில் தான் நாங்கள் இருந்தோம். சம்பவம் பற்றி கேட்டதும் நிலை தடுமாறினோம். ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. உள்ளூர்வாசிகள் உதவியுடன், ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
டில்லி தமிழ்நாடு இல்லத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் எங்களை பத்திரமாக பார்த்து கொண்டனர். எப்படியோ நல்லபடியாக வந்து விட்டோம்.
போகும்போது சந்தோஷமாக சென்றோம்; இந்த செய்தியை கேட்டவுடன் பதறி விட்டோம். அரசு உதவி கிடைக்காமல் போயிருந்தால், பதற்றத்திலேயே இருந்திருப்போம். பதற்றமான சூழ்நிலை எப்படி என்பதை நிஜத்தில் உணர்ந்தோம்.
ஒரு மணி நேரத்திற்கு முன் சென்றிருந்தால், எங்கள் நிலையும் கவலைக்கிடமாகி இருக்கும். ராணுவத்தினரின் உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், பயங்கரவாதிகள் தாக்குதலில், ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த மதுசூதனன் ராவ் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடல் நேற்று, ஹைதராபாத் வழியாக சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர் கரு.நாகராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றனர்.
செல்வப்பெருந்தகை கூறுகையில், ''பயங்கரவாதிகளின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. இந்திரா, ராஜிவ் போன்றோர் பயங்கரவாதிகளால் தான் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு மதம், இனம் என்ற அடையாளமே கிடையாது,'' என்றார்.
நயினார் நாகேந்திரன் கூறுகையில், ''சுற்றுலா பயணியரை, 'நீ ஹிந்துவா' என்று கேட்டு கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்,'' என்றார்.

