ADDED : ஜன 16, 2025 11:33 PM
கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும், 26ல் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோதண்டம் கூறினார்.
அவர் கூறியதாவது:
அரசு துறையில் தொடர்ந்து, 10 ஆண்டு கள் பணிபுரிந்தால், அவர்களை பணிநிரந்தரம் செய்வதாக, தேர்தல் நேரத்தில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
அந்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை. டாஸ்மாக்கில் பலர், 21 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிபுரிகின்றனர். எனவே, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன், வரும், 26ல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
வரும் 20ல் பேச்சுக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்துள்ளனர். இந்த பேச்சில் உடன்பாடு ஏற்படாவிட்டால், 27ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மூடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -