கிடப்பில் ஊதிய உயர்வு அறிவிப்பு 'டாஸ்மாக்' ஊழியர்கள் அதிருப்தி
கிடப்பில் ஊதிய உயர்வு அறிவிப்பு 'டாஸ்மாக்' ஊழியர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 14, 2025 07:12 PM
சென்னை:அரசு அறிவித்த ஊதிய உயர்வு வழங்கப்படாதது, டாஸ்மாக் ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரல் முதல், 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகையில், 1,000 ரூபாயை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாகவும், மற்றொரு, 1,000 ரூபாயை ஊக்கத்தொகையாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. சிறப்பாக செயல்படுவோருக்கு மட்டுமே, ஊக்கத்தொகை கிடைக்கும்.
எனவே, ஊக்கத்தொகை முடிவுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஊதிய உயர்வு விவகாரத்தில், அரசு எந்த முடிவும் எடுக்காமல், கிடப்பில் போட்டுள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச் செயலர் தனசேகரன் கூறியதாவது:
மதுக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை, சட்டசபையில் எப்போது வெளியிட்டாலும், அந்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறையாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்க அரசு தாமதம் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.