ADDED : ஆக 21, 2025 10:48 PM
சென்னை:டாஸ்மாக் கடைகளில் நேற்று, கையடக்க விற்பனை கருவிகளின் இயக்கம், 'சர்வர்' பாதிப்பால் முடங்கியதால், மது விற்பனையில் தாமதம் ஏற்பட்டது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. மது விற்பனை முழுதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கடை ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கருவியில், மது பாட்டிலில் உள்ள, 'கியூ ஆர் கோடை' 'ஸ்கேன்' செய்து, 'குடி'மகன்களிடம் விற்கின்றனர்.
நேற்று மதியம், 12:00 மணிக்கு, மதுக்கடைகள் திறந்த பின், 'சர்வர்' பாதிப்பால், கையடக்க கருவிகள் சரியாக இயங்கவில்லை. இதனால், கடைகளில் மது விற்பனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து, டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்க பொதுச் செயலர் தனசேகரன் கூறுகையில், ''இதுபோல் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு நபருக்கும் மது பாட்டிலை ஸ்கேன் செய்து விற்க அதிக நேரமாகிறது. கடைகளில் பிரச்னை ஏற்படுகிறது. பழுது ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.