ADDED : டிச 18, 2024 09:21 PM
சென்னை:தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணையை ரத்து செய்யும்படி, 'டிட்டோஜாக்' சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறியிருப்பதாவது:
மாவட்டங்களுக்குள் உள்ள ஒன்றியங்களுக்குள் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் வகையில், அரசாணை 243 வெளியிடப்பட்டது.
பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண் ஆசிரியர்களே பணியாற்றும் நிலையில், பதவி உயர்வுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியுள்ளது.
பெரும்பாலான ஆசிரியர்கள் வயது மூப்படையும் போது வரும் இந்த பதவி உயர்வால், குடும்பம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதைக் கருதி பலர் பதவி உயர்வை தவிர்க்கும் நிலை உள்ளது. அதனால் இதை திரும்ப பெற்று, பழையபடியே ஒன்றியத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.