ADDED : மார் 22, 2026 03:37 AM
சென்னை: 'தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, வாகன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்' என, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடக்கிறது. தேர்தல் பணிக்காக அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களிடம் இருந்து, சுய விபரப்படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
அனைவருக்கும் தேர்தல் பணி வழங்காமல், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி புற்றுநோய், இதயநோய், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளோர், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருப்போர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு தேர்தல் பணிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உள்ளேயே, ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் வகையில், பணி ஆணை வழங்க வேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று, காலை, மதியம், இரவு உணவுகள் கூட சரியாக கிடைப்பதில்லை.
அனைவருக்கும், உரிய நேரத்தில் தரமான உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைத்திட, மாவட்ட நிர்வாகம் வழியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் பணிக்கு செல்வோரில், பெரும்பாலோர் பெண்கள் என்பதால், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லவும், தேர்தல் பணி முடித்து வீடு திரும்பவும், வாகன வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
