அறிவியல் நிலைய விஞ்ஞானிக்கு மாற்றாக தொழில்நுட்ப அலுவலர்; பயிற்சி பெறும் விவசாயிகள் கவலை
அறிவியல் நிலைய விஞ்ஞானிக்கு மாற்றாக தொழில்நுட்ப அலுவலர்; பயிற்சி பெறும் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 01, 2026 04:28 AM

சிவகங்கை: தமிழகத்தில் கால்நடை பல்கலையின் கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகளுக்கு மாற்றாக தற்காலிக தொழில்நுட்ப அலுவலர் நியமனத்தால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதிய தொழில்நுட்பம், கால்நடைகளை பாதுகாப்பது குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக 31 இடங்களில் வேளாண் (கே.வி.கே.,) அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இதில் 15 நிலையங்கள் வேளாண்மை பல்கலை, 16 நிலையங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடை பல்கலையின் கீழ் காஞ்சிபுரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சிவகங்கை (குன்றக்குடி) ஆகிய 4 மாவட்டங்களில் வேளாண் அறிவியல் நிலையம் செயல்படுகிறது. இந்த நிலையங்கள் மூலம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு பயிற்சி அளிக்கும் விதமாக வேளாண், கால்நடை விஞ்ஞானிகள் (பி.எச்டி., முடித்தோர்) சம்பளம், பயிற்சி செலவின தொகையில் 89 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. எஞ்சிய 11 சதவீத தொகையை மாநில அரசு விடுவிக்கும்.
கால்நடை பல்கலையின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையம் ஒன்றில் பி.எச்டி., முடித்த 6 விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அலுவலர், உதவியாளர் என 16 பேர் வரை பணிபுரிந்தனர்.
இந்த நிலையில் பி.எச்டி., முடித்த விஞ்ஞானிகளை, வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து கால்நடை பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளுக்கு மாற்றி விட்டனர்.
அதற்கு பதிலாக மாநில அரசின் 11 சதவீத செலவின தொகையை பெற முயற்சிக்காமல், தற்காலிக அடிப்படையில் எம்.எஸ்சி., முடித்த தொழில்நுட்ப அலுவலர்களை மட்டுமே நியமித்துள்ளனர். இதனால் வேளாண் அறிவியல் நிலையங்களில் முழுமையான, தெளிவான பயிற்சி தங்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
வாய்ப்பை தவற விட்ட நிர்வாகம் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரி கூறியதாவது: விவசாயிகளுக்கு வேளாண், கால்நடை சார்ந்த பயிற்சி அளிப்பது ஒரே விதத்தில் தான் இருக்கும். அதேநேரம் வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும் 15 வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசு 11 சதவீத செலவின தொகையை விடுவிக்க தேவையான நடவடிக்கையை அப்பல்கலை நிர்வாகம் எடுத்துவிட்டதால், தொடர்ந்து பி.எச்டி., முடித்த விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரம் கால்நடை பல்கலை நிர்வாகம் இந்த முயற்சியை எடுக்காமல் தற்காலிக தொழில் நுட்ப அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கின்றனர் என்றார்.
