ADDED : அக் 01, 2024 06:00 AM
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வைகுந்தம் என்ற பகுதி அருகே, திருமண மண்டபத்தையொட்டி சர்வீஸ் சாலை உள்ளது. இங்குள்ள சிறிய பாலத்தின் கீழ், துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன்படி, சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயல், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அப்போது, பாலத்திற்கு கீழ் இருந்த சூட்கேசில், இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.
வேறு பகுதியில் கொலை செய்து விட்டு, உடலை இங்கு வீசியிருக்கலாம் என்றும், கொல்லப்பட்ட பெண்ணுக்கு, 20 வயது இருக்கலாம் என்றும், அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.