சிகிச்சையில் இளம்பெண் இறப்பு தனியார் மருத்துவமனை முற்றுகை
சிகிச்சையில் இளம்பெண் இறப்பு தனியார் மருத்துவமனை முற்றுகை
ADDED : நவ 08, 2024 06:40 AM

புதுச்சேரி: காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட, இளம்பெண் இறந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் முத்து, பிளம்பர். இவரது மகள் விந்தியா,22; பட்டப்படிப்பு முடித்து விட்டு, வீட்டில் இருந்த விந்தியா தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டார். அதனால், அவரை நேற்று முன்தினம் 6ம் தேதி மதியம், மூலக்குளத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதிர்ச்சி அடைந்த விந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவத்தினால், மருத்துவமனை வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.