2026ல் தவெக - திமுக இடையே தான் போட்டி; மீண்டும் சொல்கிறார் விஜய்
2026ல் தவெக - திமுக இடையே தான் போட்டி; மீண்டும் சொல்கிறார் விஜய்
ADDED : செப் 27, 2025 03:29 PM

நாமக்கல்: 2026 சட்டசபை தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று நாமக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை தோறும் மாவட்டம் மாவட்டமாக தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், நாமக்கல்லில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக, நாமக்கல் வந்த அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர். சாலைகளில் தொண்டர்கள் குவிந்ததால், அவர் பிரசார இடத்திற்கு செல்ல 6 மணிநேரம் ஆனது. அதன்பிறகு, அவர் சுமார் 15 நிமிடம் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது; லாரி பாடி கட்டும் தொழில், கோழிப்பண்ணை உள்பட பல தொழில்களுக்கு பிரபலமான ஊர் தான் நாமக்கல். தமிழக மக்களுக்கு சத்தான உணவு முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு உணர்ச்சி ஊட்டும் மண் கூட. இதை ஏன் சொல்கிறேன் என்றால், 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லுடா,' என்று நாடி நரம்புக்கு உணர்ச்சி ஊட்டும் இந்த வரிகளை எழுதியவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தான்.
வெறும் பாக்கெட் தான்
தமிழக மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு உரிமையை வழங்கியதும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு சுப்பராயன். இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினார். சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி (வாக்குறுதி எண் 456) கொடுத்தது யாரு? சொன்னீங்களே… செஞ்சீங்களா?
ஒரு படத்தில் வடிவேலு வெறும் (Empty) பாக்கெட்டை காட்டுவாரே. அதேபோல் தான் இவர்கள் (திமுக) கொடுத்த வாக்குறுதிகளும். ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு, நாமும் அதேபோல் வெறும் பாக்கெட்டை காட்ட வேண்டியது தான்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைப்படும் என்று கூறினார்கள். (வாக்குறுதி நம்பர் 50)
கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும். அதில் இருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்தி ரேஷன் கடைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் (வாக்குறுதி நம்பர் 66)
ரேஷன் கடைகளில் நாட்டுச்சர்க்கரை, வெல்லம் ஆகியவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் (வாக்குறுதி நம்பர் 68)
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் (வாக்குறுதி (152). இதை எல்லாம் சொன்னாங்களே… செய்தார்களா?
ஆண்ட கட்சிகளும்... ஆளும் கட்சியும்...
நாமக்கலில் முட்டைகள் வீணாகாமல் இருக்க, முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பாக்டீரியா, வைரலாஜிக்கல் பரிசோதனையை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருக்கிறது. இதுவரை ஆண்ட கட்சிகளும், இப்போது ஆளும் கட்சியும் சரி, அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
ஆட்சி அமைந்ததும்...
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு பற்றி திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, விசைத்தறியில் பணிபுரியும் ஏழை பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்ததாக சொல்கிறார்கள். இதில், ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்ம ஆட்சியமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்தக் கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால், கந்து வட்டி கொடுமையில் இருக்கிறது.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் இந்த ஏமாற்றும் மாடல் திமுக அரசு மேம்படுத்தாத காரணத்தில் கிட்னி விற்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கை பற்றி எங்களின் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
முதல்வரைப் போல அடித்து விடுவோம்
இந்த சுற்றுப்பயணத்தின் போது அனைத்து மக்களும் இந்த ஒரு விஷயத்தை தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். நல்ல சாலை வசதி, நல்ல குடிநீர், நல்ல மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைத் தான் மக்கள் கேட்கிறார்கள். விஜய் ஆட்சிக்கு வந்தால், அடிப்படை வசதிகளில் எந்த சமரசமும் இல்லை.
ஒரு மனிதனுக்கு நல்ல சாப்பாடு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து உள்ளிட்டவை தான் அவசியம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதைத் தான் சொல்வோம். அதை மட்டும் தான் செய்வோம். திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். புதிதாக ஏதாவது சொல்லுங்க என்றால், என்னத்த சொல்வது?
செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, காற்றில் கல்வீடு கட்டப்படும். அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும். வீட்டுக்குள்ளேயே விமானம் ஓட்டப்படும். இந்த மாதிரி அடிச்சி விடுவோமா? நம்ம முதல்வர் அடித்து விடுவாரே, அந்த மாதிரி அடித்து விடுவோமா?
எப்போதும் ஒத்துப்போக மாட்டோம்
நான் ஏற்கனவே சொன்னதைத் தான் திரும்பவும் சொல்கிறேன். பாஜவுடன் எப்போதும் நாங்க ஒத்துப் போக மாட்டோம். இரண்டாவது, இந்த திமுக அரசு மாதிரி மறைமுக உறவுக்காரர்களாக இந்த பாஜவுடன் எப்போதுமே இருக்க மாட்டோம். மூன்றாவது, ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்து, தமிழகத்தின் நலனுக்காக பாஜவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று சொல்பவர்களைப் போல நாம் இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு தேவையான விஷயங்களை பாஜ அரசு செய்திருக்கிறார்களா? பிறகு எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்ஜிஆர் தொண்டர்கள் கேட்கிறார்கள்.
தவெக - திமுக போட்டி
அதிமுக - பாஜ நேரடி உறவுக்காரர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களின் கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரியும். அதேசமயம், இந்த திமுக குடும்பம், பாஜவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருப்பதை தயவு செய்து மறந்து விடாதீங்க. வரும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கனா, அது பாஜவுக்கு ஓட்டு போட்ட மாதிரி. வேண்டாம் மக்களே, கொஞ்சம் யோசியுங்கள். 2026ல் தவெக மற்றும் திமுகவுக்கு தான் போட்டி. இந்த மோசமான ஆட்சியைக் கொடுக்கும் இந்த திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமா, இல்ல எளியோருக்கான தவெக ஆட்சி அமைக்கணுமா?, என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? நாம் ஒரு கை பார்த்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.