பற்கள் பிடுங்கிய விவகாரம்: 'மெமோ'வை எதிர்த்து ஏ.எஸ்.பி., வழக்கு
பற்கள் பிடுங்கிய விவகாரம்: 'மெமோ'வை எதிர்த்து ஏ.எஸ்.பி., வழக்கு
ADDED : பிப் 11, 2026 06:45 AM

சென்னை: தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய கோரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மனு தாக்கல் செய்து உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் போலீஸ் ஏ.எஸ்.பி.,யாக, 2023ம் ஆண்டு பணிபுரிந்த பல்வீர் சிங், குற்ற வழக்குகளில் சிக்கிய நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.
பல்வீர் சிங் மீது பதிவான நான்கு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டன. வழக்குகளின் விசாரணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
புகாரை விசாரித்த உயர்மட்ட குழு, பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை அளித்தது. இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த, குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டது.
இதை ரத்து செய்ய கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில், பல்வீர் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தது. ஈரோடு சிறப்பு அதிரடிப்படையில், தற்போது பல்வீர் சிங், ஏ.எஸ்.பி.,யாக உள்ளார்.

