ADDED : ஜூன் 05, 2025 12:38 AM
சென்னை:'தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை பாரிமுனை, சென்ட்ரல், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல், 9ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும். அதிக வெப்பம், காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக, வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.