தமிழகத்தில் 4 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்!
ADDED : ஏப் 21, 2025 06:07 AM

சென்னை: 'தமிழகத்தில் ஒருசில இடங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் வால்பாறையில், 4; நீலகிரி மாவட்டம் உபாசி, கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளம், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தலா, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளில் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், இரு காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை, அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல் ஷியஸ் வரை பதிவாகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
7 நகரங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் வேலுாரில், தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் வாட்டியது.