4 நாட்களுக்கு வெயில் தாக்கம் 3 டிகிரி அதிகரிக்கும்
4 நாட்களுக்கு வெயில் தாக்கம் 3 டிகிரி அதிகரிக்கும்
ADDED : ஏப் 24, 2026 11:12 PM
சென்னை: தமிழகத்தில் இன்று முதல், நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
மஹாராஷ்டிரா மாநிலம், கிழக்கு விதர்பா முதல், தமிழகத்தின் குமரிக் கடல் வரை வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் இன்று முதல், நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
