ADDED : ஏப் 13, 2026 06:38 PM
சென்னை;'தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயிலின் தாக்கம் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
வடகிழக்கு பீஹார் முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று முதல், 19 வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள் மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். இதனால், வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
அதிக வெப்ப நிலை மற்றும் அதிகரிக்கும் ஈரபதம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மக்களுக்கு, 17 வரை அசவுகரியம் ஏற்படக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
