UPDATED : ஜூலை 08, 2025 08:50 AM
ADDED : ஜூலை 08, 2025 05:07 AM

சென்னை: 'தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 13 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், பெரும்பாலான இடங்களில் இன்று பகல் நேரத்தில், 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசவுகரியம் ஏற்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில், 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, ஏழு நகரங்களில், 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.