முதல்வர் எங்கு பேசினாலும் பதற்றம் தெரிகிறது: உதயகுமார் கிண்டல்
முதல்வர் எங்கு பேசினாலும் பதற்றம் தெரிகிறது: உதயகுமார் கிண்டல்
ADDED : மே 05, 2025 01:56 AM

மதுரை: “மக்கள் பிரச்னை குறித்து சட்டசபையில் பேச சபாநாயகர் தடுக்கலாம்; ஆனால், பொது வெளியில் பேசுவதை யார் தடுக்க முடியும்?” என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அவரது அறிக்கை:
சட்டசபை கூட்டத்தில் தி.மு.க., அரசு, ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அ.தி.மு.க., தரப்பில் தொடர்ந்து மக்கள் பிரச்னைகள் குறித்து பேச முற்பட்டோம். ஆனால், சபையில் எதையும் பேச அனுமதிக்கவில்லை. வாய்ப்பு பெற்று பேசிய ஒரு சிலரின் பேச்சை நேரலை செய்யாமல் துண்டித்து விட்டனர்.
சபையில் அ.தி.மு.க., தரப்பு எடுத்து வைத்து பேசிய வாதங்களை, முதல்வர் ஸ்டாலினால் எதிர்கொள்ள முடியவில்லை. அவருக்கு குளிர் காய்ச்சலே வந்துவிட்டது.
அரசுக்கு சபாநாயகர் முட்டுக் கொடுத்து, சபையில் எதிர்க்கட்சியினரை பேச விடாமல் செய்து விடலாம். ஆனால், பொது வெளியில் பேசும்போது, அதை அவரால் எப்படி தடுக்க முடியும்? மக்கள் தி.மு.க.,வை தண்டிக்க தயாராகி விட்டனர்.
சட்டசபை, பொதுக்கூட்டம், மாவட்டச் செயலர்கள் கூட்டம் என எங்கு பேசினாலும், முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் ஒருவித பதற்றமும் நடுக்கமும் அப்படியே வெளிப்படுகிறது.
முதல்வராக இருந்து கொண்டு ஆட்சி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு பற்றி கவலைப்படாத முதல்வர் ஸ்டாலின், சர்வசதா காலமும் அ.தி.மு.க.,வின் செயல்பாட்டையும், பழனிசாமியையும் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

