பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கு: விசாரணை நவ.11க்கு ஒத்திவைப்பு
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கு: விசாரணை நவ.11க்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 04, 2025 01:58 AM

ராமநாதபுரம்:  ராணுவ ரகசிங்களை திருட பயங்கரவாதி களுக்கு உதவியாக இருந்த இலங்கை, மலேசியாவைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கு நவ.,11க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52, இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வந்தார்.
இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பை சேர்ந்த முகமது யாசீர் 40, அவர் மனைவி பாரிகா ரிஸ்மியா 35, பயங்கரவாதி களுக்கு ஆதரவாக இருந்தனர்.
இவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி பொய்யான தகவல்களை தெரிவித்து ஆதார் கார்டு, சிம்கார்டுகளை பெற்றுள்ளனர்.
அந்த சிம் கார்டுகளை பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம் முகமது யாசீர் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி, 'மால்வேர் அட்டாக்' மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார்.
ராணுவ அதிகாரிகளின் அலைபேசிகளை ஹேக் செய்து தகவல்களை அழித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் 2021ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி  தலைமறைவானார்.
மற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா இலங்கை கைதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் விசாரணைக்கு வந்தது.
சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை நவ.,11க்கு ஒத்தி வைத்தார்.

