பார்சல் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பெற்ற பயங்கரவாதி
பார்சல் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பெற்ற பயங்கரவாதி
ADDED : ஆக 05, 2025 11:14 PM
சென்னை:ஆந்திராவில் பதுங்கி இருந்த, பயங்கரவாதி முகமது அலி, பார்சல் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் ஹிந்து தலைவர்கள் கொலை வழக்குகளில், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால், சமீபத்தில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்த, பயங்கரவாதி டெய்லர் ராஜாவும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் தலைமறைவாக இருந்த நாட்களில், பயங்கரவாத செயலில் ஈடுபட்டனரா என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், ஆந்திராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில், சோதனை நடத்தி, முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர்.
இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் இப்ராஹிம் தாய்க்கா வீதியை சேர்ந்தவர் முகமது அலி. கடந்த 1998ல் நடத்தப்பட்ட, கோவை தொடர் குண்டு வெடிப்புக்கு, முக்கிய நபராக செயல்பட்டவர். இவர், யூனுஸ், ேஷக் மன்சூர் என்ற பெயரில், சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது, சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையங்களில், பல்வேறு வெடிகுண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.
தலைமறைவாக இருந்த ஆண்டுகளில், பார்சல் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்துள்ளார். அதற்கான கட்டளைகளை பிறப்பிக்கும் இடத்தில், அபுபக்கர் சித்திக் இருந்துள்ளார். தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தில், முக்கிய நபராக இருந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.