'ஜவுளி உற்பத்தி சந்தை மதிப்பு 2030ல் 29 லட்சம் கோடியாகும்':அமைச்சர் கிரிராஜ் சிங்
'ஜவுளி உற்பத்தி சந்தை மதிப்பு 2030ல் 29 லட்சம் கோடியாகும்':அமைச்சர் கிரிராஜ் சிங்
ADDED : நவ 18, 2024 01:27 AM

சென்னை: ''அண்டை நாடான வங்கதேச அரசியல் சூழலால், இந்திய ஜவுளி துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
சென்னை தரமணியில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்லுாரியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் ஆடைகள் வடிவமைப்பில், ஏழு கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரமணி நிறுவனம் மாணவ - மாணவியரை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது.
நம் நாட்டில், 130 கோடி மக்களுக்கு, ஆடையானது அடிப்படை உரிமையாக இருப்பதால், இத்துறைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.
இதற்காக, 'விஷன் நெக்ஸ்ட்' என்ற திட்டம் துவக்கப்பட்டு, அதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் தரப்படுகிறது.
விஷன் நெக்ஸ்ட், மேக் இன் இந்தியா திட்டம் வாயிலாக, ஆடைகள் வடிவமைப்பில் மேலை நாடுகளை விட முன்னேறி வருகிறோம்.
நம் நாட்டில் ஜவுளி உற்பத்தி சந்தை மதிப்பு, 14 லட்சத்து, 78 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக உள்ளது.
இது, 2030ல், 29 லட்சத்து, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும். தற்போது, ஜவுளி துறையில், 4.6 கோடி பணியாளர்கள் உள்ள நிலையில், 2030க்குள், 6 கோடி பேராக உயரும்.
விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தமிழகம் ஜவுளி துறையில் முன்னேறிய மாநிலமாக உள்ளதுடன், முக்கிய பங்காற்றி வருகிறது.
அண்டை நாடான வங்கதேச அரசியல் சூழலால், இந்திய ஜவுளி துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு ஜவுளி உற்பத்தியில், 45 லட்சம் பேர் தான் உள்ளனர்.
இங்கு பல மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.