தேர்தல் முடிந்ததும் 'அந்த சார்' உள்ளே போவார்: நாகேந்திரன்
தேர்தல் முடிந்ததும் 'அந்த சார்' உள்ளே போவார்: நாகேந்திரன்
ADDED : நவ 16, 2025 05:49 AM

விருதுநகர்: ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான, ஞானசேகரன் சொன்ன, அந்த 'சார்', விரைவில் உள்ளே போவார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை, தி.மு.க.,வினர் பெரிய விஷயமாக பேசுகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்தோர் பெயரை நீக்க வேண்டும்; அவ்வளவுதான். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இதைப்பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய, தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் சொன்ன சாரை விட, இந்த 'சார்' மோசமான சார் அல்ல.
ஞானசேகரன் சார், இப்ப சிறை உள்ளே இருக்காரு. அவர் வாஞ்சையோடு அழைத்த, 'அந்த சார்', இன்னும் வெளியே தான் இருக்கிறார். சட்டசபை தேர்தல் முடிந்ததும், அந்த குறிப்பிட்ட சாரும் உள்ளே போவது நிச்சயம்.
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்காமல், மத்திய அரசுடன் தமிழகம் தொடர்ந்து மல்லுகட்டுகிறது. மத்திய அரசுக்கு எதிராக வீர வசனம் பேசி, தி.மு.க.,வினர் காலம் கழிக்கின்றனர். இதனால், தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.

