நாடு முழுதும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு; 2026 ஏப்ரல், 2027 பிப்ரவரியில் நடக்கிறது
நாடு முழுதும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு; 2026 ஏப்ரல், 2027 பிப்ரவரியில் நடக்கிறது
ADDED : ஜன 28, 2026 04:54 AM

சிவகங்கை: இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக 2026 ஏப்., முதல் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பும், 2027 பிப்.,ல் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது.
இந்தியாவில் 1872ல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது வெவ்வேறு கட்டமாக கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பின்னர் ஒவ்வொரு 10 ஆண்டிற்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 2026 ஏப்., முதல் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பும், 2027 பிப்.,ல் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது.
கணக்கெடுப்பில் 33 கேள்விகள்: முதற்கட்டமாக 2026 ஏப்., முதல் வீடு, வணிக கட்டட கதவு எண், வீட்டு எண், வீட்டின் தரைத்தளம், வீட்டுச்சுவரில் பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், கூரை ரகம், வீட்டின் உறுதித்தன்மை, நிலை, வீட்டுவரி எண், வீட்டுத்தலைவரின் பாலினம், ஜாதி, உரிமையாளரின் நிலை, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் திட்டங்கள், மின்விளக்கு, கழிப்பறை வசதி, கழிவுநீர் வெளியேற்றும் திட்டம், அடுப்பறையில் உள்ள சிலிண்டர் வகை, சமையலுக்கு பயன்படும் எரிபொருள், டி.வி., ரேடியோ, இன்டர்நெட் இணைப்பு, தொலைபேசி, அலைபேசி, சைக்கிள், டூவீலர், கார், ஜீப், வேன், வீட்டில் உள்ளோர் சாப்பிடும் தானிய வகைகள், வீட்டு உரிமையாளரின் அலைபேசி எண் உட்பட 33 விதமான வினாக்கள் முதற்கட்ட கணக்கெடுப்பில் இடம் பெறும். இதனை தொடர்ந்து 2027 பிப்., முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

