சென்னை வந்தது மத்திய அரசின் 16வது நிதிக்குழு: முதல்வர், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
சென்னை வந்தது மத்திய அரசின் 16வது நிதிக்குழு: முதல்வர், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
ADDED : நவ 18, 2024 01:25 AM

சென்னை: தமிழகத்திற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள மத்திய அரசின் 16வது நிதிக்குழு, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்வு தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, மத்திய அரசு சார்பில் நிதிக்குழு அமைக்கப்படுகிறது. இதில், இடம் பெற்றுள்ளவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவர்.
நான்கு நாள் பயணம்
அதன்படி, 16வது நிதிக்குழு தலைவரான அரவிந்த் பனகாரியா தலைமையில், உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, அன்னி ஜார்ஜ் மேத்யு, மனோஜ் பாண்டா, சவும்யா கண்டி கோஷ் மற்றும் குழுவின் செயலர் ரிவத்விக் பாண்டே உள்ளிட்டோர் இடம்பெற்ற 11 பேர் குழுவினர், நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர்.
நேற்று மாலை சென்னை வந்த குழுவினரை தமிழக அதிகாரிகள் வரவேற்றனர். குழுவினர், கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்து, நினைவு பரிசு வழங்கினார். இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், மாநிலத்திற்கான நிதி பகிர்வு தொடர்பாக குழுவினர் இன்று முற்பகலில் கலந்துரையாட உள்ளனர்.
அப்போது, தமிழக அரசு சார்பில் கோரிக்கைகள் எடுத்துரைக்கப்படும். மதிய உணவிற்கு பின், வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், குழுவினர் கலந்துரையாட உள்ளனர்.
நாளை, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையையும், ஸ்ரீபெரும்புதுாரில் அமைந்துள்ள ஏற்றுமதி சார்ந்த அலகு மற்றும் தொழில்துறை வீட்டு அலகையும் பார்வையிடுகின்றனர்.
நிதி பகிர்வு குறைப்பு
அதன்பின், மதுரைக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாளை மாலை சென்று வழிபடுகின்றனர்.
நாளை மறுநாள், பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தங்கச்சிமடம் ஊராட்சியில் கட்டப்படும் வீடுகளையும், ராமநாதபுரம் நகராட்சியையும் பார்வையிட உள்ளனர்.
தொடர்ந்து, மதுரை செல்லும் வழியில் கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிடுகின்றனர். பின் மதுரை சென்று, இரவு டில்லி புறப்படுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 9வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு, 7.931 சதவீதமாக இருந்த நிதி பகிர்வு, 15வது நிதிக்குழுவால், 4.079 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனால், 3.57 லட்சம் கோடி ரூபாய் வரை தமிழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசுக்கான நிதி பகிர்வை அதிகரிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில், 16வது நிதிக்குழுவிடம் வலியுறுத்தப்பட உள்ளது.
அரசின் தேவைகளை எடுத்துரைத்து நிதி பெறும் பணி, வணிக வரித்துறை செயலர் பரதேஜந்திர நவ்னீத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தும் 16வது நிதிக்குழு, தன் பரிந்துரைகளை, அடுத்த ஆண்டு அக்., 31க்குள் சமர்ப்பிக்கும். இக்குழு பரிந்துரைப்படி, 2026 ஏப்., 1 முதல், தமிழகம் நிதி பெற துவங்கும் என்று, அதிகாரிகள் கூறினர்.