3 நாட்களாக நடந்த அமலாக்க துறை சோதனை... முடிந்தது
3 நாட்களாக நடந்த அமலாக்க துறை சோதனை... முடிந்தது
UPDATED : மார் 10, 2025 12:07 AM
ADDED : மார் 09, 2025 11:02 PM

'டாஸ்மாக்' நிறுவன தலைமை அலுவலகம், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்தச் சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அதிரவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளது.
இந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மேலாக மது பானங்கள் விற்பனையாகின்றன.
டாஸ்மாக் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மற்ற மதுபானங்கள் கொள்முதலாகின்றன. இந்த மது ஆலைகளை எல்லாம், தி.மு.க., முக்கிய புள்ளிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன.
அதனால், கடந்த மூன்று நாட்களாக, டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மற்ற இடங்களில் முன்னதாகவே சோதனையை முடித்தாலும், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் தான் சோதனையை நிறைவு செய்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தச் சோதனையின் போது, சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில் உள்ள, தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும், 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவரீஸ்' மது ஆலை அலுவலகத்தில், கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
அதேபோல, தி.மு.க., மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படுபவர், எஸ்.என்.ஜெயமுருகன். இவரின், எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்படுகிறது. அங்கிருந்தும், போலி ரசீதுகள், கலால் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
தி.மு.க.,வை சேர்ந்த மிக முக்கிய புள்ளி ஒருவரின் நெருங்கிய நண்பர் வாசுதேவன். இவரது கால்ஸ் குழுமத்தின் சென்னை தலைமை அலுவலகம், தி.நகரில் செயல்படுகிறது. அங்கு மட்டும் மூன்று நாட்களாக, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்த, 25க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக, கட்டுக்கட்டாக ஆவணங்களை எடுத்துள்ளனர். எம்.ஜி.எம்., என்ற மதுபான ஆலை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்கள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து தான், டாஸ்மாக் நிறுவனம், 75 சதவீத மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மதுபான கொள்முதலில் மட்டுமின்றி, சட்டவிரோதமாக பார்களிலும், மது விற்பனை செய்து மோசடி நடந்துள்ளது. சில்லரை கடைகளுக்கு, தனியார் மது ஆலைகள் சார்பில், 'கியூ ஆர்' கோடு வைத்து வசூல் வேட்டை நடந்துள்ளது. எங்களின் சோதனையில் கணக்கில் வராத, 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், 2016 - 2021 வரை பதிவு செய்த, 35க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துள்ளோம். இதில், தொடர்புடைய எல்லோரிடமும் விசாரணை செய்ய உள்ளோம். நட்சத்திர ஹோட்டல்களில், மது பார்கள் நடத்த உரிமம் வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதுபற்றியும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
***
- நமது நிருபர் -