கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவு ...பலித்தது! அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியது
கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவு ...பலித்தது! அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியது
ADDED : ஆக 18, 2024 01:19 AM

தமிழகத்தின் விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு, முதல்வரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கொங்கு மண்டலத்தின் வறண்ட பகுதிகளில் விவசாயம் செழிக்க, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். கடந்த, 1957ல், இத்திட்டத்தை நிறைவேற்ற சட்டசபையில் எம்.எல்.ஏ., மாரப்பக்கவுண்டர் கோரிக்கை வைத்தார். அதிலிருந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
மேட்டுப்பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டுள்ள பவானி ஆற்று நீர் சார்ந்து, ஏராளமான குடிநீர் மற்றும் பாசன திட்டங்கள் உள்ளன. கொடிவேரி பாசன திட்டத்தில், 24,504 ஏக்கர்; காலிங்கராயன் பாசன திட்டத்தில், 15,743 ஏக்கர்; கீழ் பவானி பாசன திட்டத்தில், 2.07 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில், நொய்யல் - பவானி இடையே கோவை மாவட்டம், காரமடை துவங்கி ஈரோடு மாவட்டம், நம்பியூர், பெருந்துறை வரையிலான மேட்டுப்பகுதி மழை மறைவு பிரதேசமாக இருந்தன. இங்கு விவசாயத்துடன், தொழிற்சாலைகளும் பெருகின. தேவைக்கேற்ப நீர் இல்லை. மழையளவும் குறைவாக இருக்கும். பெரும்பாலும் மானாவாரி சாகுபடியே நடக்கிறது.
மழையின்மையால், காரமடை, அன்னுார், நம்பியூர், பெருந்துறை உள்ளிட்ட இடங்களில், நிலத்தடி நீர்மட்டம், 1,600 அடிக்கும் கீழ் சென்றது. வறட்சியால் பலர் கோவை, மைசூரு போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டாததால், ஆர்வலர்கள் களமிறங்கி, விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி வீதிக்கு அழைத்து வந்தனர். கோவையில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் உருவான பின் போராட்டம் வலுப்பெற்றது.
திரும்பி பார்த்தன
கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், அத்திக்கடவு போராட்டக் குழு சார்பில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர், 33,000 ஓட்டுகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்ததும் கட்சிகள் திரும்பிப் பார்த்தன.
கிராமங்கள் தோறும், 'அத்திக்கடவு போராட்டக்குழு' என்ற பெயர் பலகை திறக்கப்பட்டது. 'நீர் தேடி போவோம்; இல்லையேல் வேறு ஊர் தேடி போவோம்' என்ற கோஷத்துடன் போராட்டம் தொடர்ந்தது.
அதன் விளைவாக, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. முக்கால்வாசி பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் 1,916.41 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தினார். அவை முடிந்த நிலையில், சோதனை ஓட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நிரப்பப்படும்
இனி, பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்தில் இருந்து, ஆண்டுக்கு, 1.50 டி.எம்.சி., உபரி நீர், வினாடிக்கு, 250 கன அடி வீதம், 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1,065 கி.மீ., நீளத்திற்கு நிலத்தடியில் குழாய் வழியாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படும்.
அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், 1,045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
துவக்க நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கயல்விழி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நீர்வள துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காளிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் நடந்த துவக்க விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர்கள் ஈரோடு ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் கிறிஸ்துராஜ், கோவை கிராந்திகுமார் பேடி, ஈரோடு எம்.பி., பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவு பலித்துள்லதால், போராட்ட குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
தனபால் அவிநாசி எம்.எல்.ஏ
- நமது நிருபர் குழு -