அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு: வளர்மதி
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு: வளர்மதி
ADDED : பிப் 19, 2025 04:44 AM

சென்னை; “தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்தான், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்,” என, முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கருப்பு சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர், தி.மு.க., அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிராக கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியது:
தமிழகத்தில், கடந்த 100 நாட்களில், 63 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண் காவலர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் பலரும், தன்னை 'அப்பா' என அழைப்பதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
பாலியல் தொந்தரவுகளால், அப்பா என கதறும் பெண் பிள்ளைகளின் ஓலம், முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பாலியல் வன்கொடுமைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்தான், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., மாணவர் அணி செயலர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு, தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

