ADDED : டிச 19, 2025 07:03 AM

சென்னை: ''கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம். மதச்சார்பின்மை கொள்கையே எங்களுக்கு நிலையானது,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ., லைட் ஆடிட்டோரியத்தில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
கபட நாடகம்
இதில், பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினர் நலம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுகளைப் பெற, தி.மு.க., கபட நாடகம் ஆடுகிறது.
பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்டுத் தோலை போர்த்தி வரும் ஓநாய் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.
தீய சக்தியிடம் நாம் ஏமாந்து போய் விட்டால், பின்னர் விடியல் என்பதே இருக்காது; எனவே, விழிப்போடு இருங்கள்.
வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி பெறும் வகையில் அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணி நியமனத்திற்கு தடையின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் தராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ தேவாலயம் கட்டுமானத்திற்கும் அனுமதி தருவதில்லை. ஒரு சிலர் அரசியல் மேடையில் கடவுள் இல்லை என்பர். என் மனைவி கிறிஸ்துவர் என்பதால், நானும் கிறிஸ்துவர்தான் என கபட நாடகம் ஆடுவர். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக அ.தி.மு.க., செயல்படுகிறது.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், எங்கள் கொள்கையில் உறுதியாக இருப்போம். அ.தி.மு.க,,வை பொறுத்தவரை, கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம். கொள்கை என்பது அ.தி.மு.க.,வுக்கு நிலையானது.
மதச்சார்பின்மை
கடந்த 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருந்தது.
எனவே, கூட்டணி என்பது, அந்தந்த அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
மதச்சார்பின்மை என்ற அ.தி.மு.க.,வின் கொள்கை நிரந்தரமானது என்பதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

