ADDED : டிச 11, 2024 02:03 AM

தமிழகத்தில், 2008ம் ஆண்டில், 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. இதில், 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 41 இருசக்கர அவசர கால வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சேவைக்கு அழைப்பு வந்த, 20 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் செல்வது இலக்காக உள்ளது.
இந்நிலையில், இந்திய தணிக்கை ஆய்வில், 2021ம் ஆண்டில், 17.43 லட்சம் அழைப்புகள் தணிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இதில், 10.74 லட்சம் அழைப்புகள், மக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்டன.
மீதமுள்ள, 6.49 லட்சம் அழைப்புகள், பணிநேர டாக்டர்கள், சிறப்பு நிபுணர்கள், சேவை வசதிகள் உள்ளிட்டவை இல்லாத காரணங்களால், ஒரு மருத்துவமனையில் இருந்து, மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், அவசர கால இடத்தைக் கண்டறிவதற்கும், அவசர கால இடத்திற்கு அருகில், வாகனத்தின் இருப்பு மற்றும் நடமாட்டத்தைக் கண்காணிக்க, ஆம்புலன்ஸ் வாகனங்களில் இடம் அறியும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், 10.74 லட்சம் அவசர அழைப்புகளில், 2.75 லட்சம் அழைப்புகளில், ஜி.பி.எஸ்., பயன்படுத்தப்படவில்லை.
இதனால், உரிய நேரத்தில் அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.
அதேபோல, 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில், அழைப்பு வந்த, 90 நொடிகளில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ஆனால், 5 முதல் 10 நிமிடங்கள் வரை, வாகனங்கள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாமதம் 108 ஆம்புலன்ஸ், விபத்து நடந்த இடத்தை அடையும் நேரத்தை அதிகரிக்கச் செய்கிறது.
அதேபோல, 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை அடைய, 22 முதல் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. எனவே, வாகனங்கள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.