ADDED : அக் 04, 2024 02:43 AM

சென்னை:ஹிந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு விழாவை ஒட்டி, சென்னை மதுரவாயலில், 2022 ஆகஸ்டில் நடந்த பொதுக் கூட்டத்தில், ஹிந்து முன்னணியின் கலை பண்பாட்டு பிரிவின் மாநில செயலரும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசினார்.
'ஸ்ரீரங்கம் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்கள் உடன் வைக்கப்பட்டிருக்கும் ஈ.வெ.ரா., சிலை உடைக்கப்படும் நாள் தான், ஹிந்துக்களின் எழுச்சி நாள்' என்று பேசிஇருந்தார்.
இவரது பேச்சு குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலகம் செய்ய துாண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், கனல் கண்ணனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள்; கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன், பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சிலையை, போலீசார் அகற்றி இருக்க வேண்டும்.
'சிலையை வைத்தவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கு பதில், எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. 'கோவில் அருகில் உள்ள ஈ.வெ.ரா., சிலை பீடத்தில், கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு எதிரான வாசகங்கள், ஆத்திரமூட்டும் விதமாக உள்ளன' எனக்கூறி, கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.