ஈஷா மையம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை இல்லை
ஈஷா மையம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை இல்லை
ADDED : அக் 05, 2024 01:24 AM
சென்னை:'கோவை ஈஷா மையம் வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தாக்கல் செய்த மனு:
யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்ற என் மகள்கள் கீதா, லதா, அங்கேயே தங்கி விட்டனர். தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஈஷா மையத்துக்கு எதிராக நாங்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும், இரண்டாவது மகள் வாயிலாக நிர்பந்திக்கின்றனர். மகள்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மகள்கள் இருவரும் நீதிபதிகள் முன் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் 'ஈஷா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய மகள் லதா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக மனுதாரருக்கு மொபைல் போன் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தும் கோவை போலீசார் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஈஷா மையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஈஷா வளாகத்தில் போலீஸ் சோதனையிட தடை விதித்தும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் காமராஜ் தாக்கல் செய்திருந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா மையம் சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 'இந்த வழக்கில் மேற்கொண்டு தாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை முடித்து வைத்தனர்.