ஏறுதழுவுதல் அரங்கிற்கு பாண்டிய மன்னன் பெயர் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
ஏறுதழுவுதல் அரங்கிற்கு பாண்டிய மன்னன் பெயர் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : ஜன 30, 2024 07:34 AM
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் அமைத்துள்ள ஏறுதழுவுதல் அரங்கிற்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரை சூட்ட உத்தரவிடக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை ஒத்தக்கடை திருமுருகன் தாக்கல் செய்த பொநல மனு: மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவிடக்கோரி 2020 ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். நீதிமன்றம், 'மனுதாரர் அனுப்பிய மனுவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்,' என, 2021 ல் உத்தரவிட்டது.
அலங்காநல்லுார் அருகே கீழக்கரை பகுதி வயிற்றுமலை அடிவாரத்தில் 50 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கு மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரை சூட்டக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். தன் நாட்டை எதிர்த்த படைகளை வென்றதால் 'ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்' என்ற சிறப்பினை பெற்றுள்ளார். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர், புலவர். கண்ணகியின் கால் சிலம்பு குறித்து தவறான தீர்ப்பு வழங்கியதற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட நீதி நெறியாளன்.
நெருக்கடிகளுக்கு இடையில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அதற்காக கட்டிய அரங்கு அரசியல் ஆளுமைகளின் பெயர்களைவிட பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரில் இருப்பது பொருத்தமானது. மன்னர் பெயரில் ஏறுதழுவுதல் திடல் என பெயர் சூட்டக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு என பெயர் சூட்டப்பட்டு தமிழக முதல்வர் ஜன.,24 ல் திறந்து வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: அரங்கிற்கு பெயர் சூட்ட பிறப்பித்த அரசாணையை எதிர்த்து மனு செய்ய மனுதாரர் விரும்பும்பட்சத்தில் அவ்வாறு செய்யலாம். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.