கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி மத்திய தொல்லியல்துறை அகழாய்வு இடம் புறக்கணிப்பா
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி மத்திய தொல்லியல்துறை அகழாய்வு இடம் புறக்கணிப்பா
ADDED : மே 24, 2025 02:13 AM

கீழடி:கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்த முதல் மூன்று கட்ட இடங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கரை ஏக்கரில் 67 ஆயிரத்து 363 சதுரடியில் 17 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் நடந்து வரும் இப்பணியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட நான்கு மற்றும் ஐந்து,ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், சுடுமண் பானை,உலைகலன்,சரிந்த நிலையில் உள்ள கூரை ஓடுகள், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட சுடுமண் பானை ஆகியவை மட்டுமே காட்சிப்படுத்தும் பணி நடக்கிறது.
மத்திய தொல்லியல் துறை 2015ல் நடத்திய அகழாய்வின் போது மிக நீண்ட செங்கல் கட்டுமான தரை தளத்தை கண்டறிந்தனர். தண்ணீர் உள்ளே வரவும், கழிவு நீர் வெளியே செல்லவும் குழாய் போன்ற அமைப்புடன் கொண்ட அந்த செங்கல் கட்டுமானத்தை வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சர்யத்துடன் ஆய்வு செய்தனர். மிகப்பெரிய செங்கற்களை கொண்ட அந்த கட்டடத்தின் கட்டுமான பணி பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அது செங்கல் கட்டுமானத்தின் தரை தளமாக இருக்க கூடும் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
புறக்கணிப்பா
மேலும் அந்த இடம் அருகே உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான செங்கல் கட்டுமானம் என வரலாற்று ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்த முதல் மூன்று கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் இதில் இடம்பெற வில்லை.
கீழடி அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தின் மினியேச்சர் சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்த நிலையில் திறந்த வெளி அருங்காட்சியகத்தில் அது இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்ட அகழாய்வு நடந்த இடத்தை காட்சிப்படுத்தினால் மட்டுமே திறந்த வெளி அருங்காட்சியக பணி திருப்தி தரும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கு அகழாய்வு நடந்த இடம் அனைத்தும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போதைய இந்த நடவடிக்கை வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

