'உழைக்க தெரியாத தமிழக முதல்வர் ஓய்வின்றி உழைக்கும் பிரதமர் மோடி' அண்ணாமலை பேட்டி
'உழைக்க தெரியாத தமிழக முதல்வர் ஓய்வின்றி உழைக்கும் பிரதமர் மோடி' அண்ணாமலை பேட்டி
ADDED : மார் 18, 2024 05:58 AM
திருப்பூர்: ''உழைக்கத் தெரியாத முதல்வர், தேர்தல் தோல்விக்காக இப்போதே காரணம் தேடுகிறார்; பிரதமர் மோடியோ 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைக்கிறார். மக்களை தேடி வீதி வீதியா அவர் வருவது தவறா?'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர், துபாய், ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார். வீட்டுக்கு வெளியே இருக்கும் பிரதமர், நாட்டு மக்களை சந்திக்கிறார்.
முதல்வர் வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தி.மு.க.,வினரும், முதல்வரை நகர்வலம் அழைத்து வரலாம். பிரதமர் மோடி, 24 மணி நேரமும், வீதிக்கு வந்து மக்களை சந்திக்கிறார்; கடுமையாக உழைக்கிறார்.
உழைக்க தெரியாத முதல்வர், தேர்தல் தோல்விக்காக இப்போதே காரணம் தேடுகிறார்; பிரதமர் வீதிக்கு வரும் நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
தி.மு.க.,வுக்கு வெறிபிடித்து சுற்றிக்கொண்டிருக்கிறது. மதம் பிடித்த யானை, தன்னிலையை மறந்து சுற்றுவது போல, பண வெறி பிடித்து தி.மு.க., சுற்றிக்கொண்டிருக்கிறது. பணவெறி, அரசியல்வெறி, பதவி வெறி பிடித்துள்ளதால், தி.மு.க.,வுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
தமிழகத்தில், தவறு செய்த யாரும் தப்பி செல்ல முடியாது; தவறு செய்தவர் சட்டத்தின் கரத்துக்கு அகப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

