விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு; ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது ஆணையம்
விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு; ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது ஆணையம்
ADDED : நவ 21, 2025 06:51 AM

சென்னை: விபசார வழக்கு போடுவதாக, பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டுவுக்கு, 2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், பெரிய புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறேன். கணவரை பிரிந்து வாழும் எனக்கு, 5 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2021 ஏப்ரலில், புதுக்கோட்டைக்கு வரவேற்பாளர் பணிக்காக நான்கு பேர் சென்றோம்.
அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த நிகழ்ச்சி பொறுப்பாளர், எங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து, சாக்கோட்டை காவல் நிலைய ஏட்டு மாயவதரன், எனக்கு போன் செய்து, நிகழ்ச்சி பொறுப்பாளர் என் மீது புகார் கொடுத்துள்ளதாக கூறி, தான் கூறும் இடத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சி பொறுப்பாளர் கூறுவதை கேட்காவிட்டால், உன் மீது விபசார வழக்கு பதிவு செய்து விடுவேன் என, மிரட்டினார்.
அது மட்டுமல்லாது, அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என, தவறான நோக்கத்துடன் பேசினார். எனவே, ஏட்டு மாயவதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், இதுகுறித்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய பின், ஏட்டு மாயவதரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை பணி இடமாறுதல் செய்துள்ளதாக, எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், 'சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, விசாரணை என்ற பெயரில் மனுதாரருக்கு ஏட்டு மாயவதரன் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மனித உரிமை மீறல்.
'எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை ஏட்டு மாயவதரனிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

