22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் விவகாரம் தமிழக கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் விவகாரம் தமிழக கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
ADDED : நவ 21, 2025 06:50 AM

சென்னை: விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழகம் விடுத்த கோரிக்கையை, மத்திய உணவு துறை நிராகரித்துள்ளது.
அதேசமயம், 'இனி ஜனவரியில் தான் நெல்வரத்து அதிகம் இருக்கும் என்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை' என, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நெல் தேங்கியது வழக்கத்தை விட அதிக நெல்வரத்து, விரைவாக கொள்முதல் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகளிடம் நெல் தேங்கியது.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், கடந்த அக்டோபரில் மழை பெய்தது. இதனால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது.
எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசுக்கு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த அக்., 19ம் தேதி கடிதம் எழுதியது.
இதையடுத்து, அம்மாதம் 25 முதல் 28ம் தேதி வரை செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து, ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய உணவு துறை அதிகாரிகள் குழு, நெல் மாதிரிகளை எடுத்துச் சென்று, இந்திய உணவு கழக ஆய்வகங்களில் சோதனை நடத்தியது.
பின், ஈரப்பத முடிவு குறித்த அறிக்கையை, இம்மாத துவக்கத்தில் மத்திய உணவு துறையிடம் சமர்ப்பித்தது.
இருப்பினும், நெல் கொள்முதல் ஈரப்பத கோரிக்கை தொடர்பாக, மத்திய குழு எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தது.
உயர்த்தவில்லை இந்நிலையில், நெல் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவை விரைவாக வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் 18ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
நேற்று மாலை, நெல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கையை நிராகரித்து, தமிழக அரசுக்கு மத்திய உணவு துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த செப்., 1ல் துவங்கிய நடப்பு சீசனில், நேற்று முன்தினம் வரை, 14.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த சீசனின் இதே காலத்தில், 4.87 லட்சம் டன்னாக குறைந்திருந்தது.
இனி, பொங்கலுக்கு பின் தான் நெல்வரத்து அதிகம் இருக்கும். இதனால், நெல்லின் ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

