தி.மு.க., ஆட்சி தொடருவது அரசு ஊழியர்கள் கையில் தான்: சத்துணவு ஊழியர் மாநில செயலர் பேட்டி
தி.மு.க., ஆட்சி தொடருவது அரசு ஊழியர்கள் கையில் தான்: சத்துணவு ஊழியர் மாநில செயலர் பேட்டி
ADDED : மார் 24, 2025 06:23 AM
துாத்துக்குடி : ''தி.மு.க., ஆட்சி தொடருவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது,'' என, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலர் ஜெசி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் துாத்துக்குடி மாவட்ட 14வது மாநாடு, துாத்துக்குடியில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலர் ஜெசி அளித்த பேட்டி:
'திராவிட மாடல் அரசு' என கூறிக்கொண்டு, சத்துணவு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க., அரசு செயல்படுகிறது. காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை வைத்து வழங்காமல், அயல்பணி வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 52,000 காலிப்பணியிடங்களை நிரப்பி, காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
மே 24 மற்றும் 25ம் தேதிகளில், திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு நடக்கிறது.
எங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை அதில் செயல்படுத்த உள்ளோம்.
பட்ஜெட் கூட்டத்தொடரில், சரண்டர் விடுப்பை 2026 ஏப்., 1க்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ல் தி.மு.க., ஆட்சி தொடருமா என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் கையில்தான் உள்ளது.
கடந்த 40 ஆண்டுகள் சத்துணவு ஊழியர்களாக பணியாற்றியவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பின், பாராமுகமாக இருப்பது சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சிக்கு வந்த பின், நான்கு ஆண்டுகளாக நிதி திரட்டாமல் தி.மு.க., அரசு உள்ளது.
மீதமுள்ள ஓராண்டு காலத்திற்குள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.