விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாகாது: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாகாது: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
ADDED : ஏப் 27, 2025 11:51 PM

சிவகாசி: ''நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்.ஜி.ஆர்., உடன் முடிந்து விட்டது. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அவர் கூறியதாவது: விஜய் நடிகர் என்பதால் அவரை பார்க்க அனைவரும் வருவது இயல்பு. விஜய் சிவகாசி வந்தால் நாங்கள் கூட ஓரமாக நின்று அவரை பார்ப்போம். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்.ஜி.ஆர்., உடன் முடிந்தது. எம்.ஜி.ஆர்., நடிப்பு மூலம் மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறி 1957ல் அரசியலுக்கு வந்து 1967ல் எம்.எல்.ஏ., ஆகி அ.தி.மு.க.,வை தொடங்கி 1977ல் ஆட்சியைப் பிடித்தார்.
எம்.ஜி.ஆர்., 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, ரசிகர்களை பொது தொண்டில் ஈடுபட வைத்து, அரசியலுக்கு கொண்டு வந்து பின் கட்சி தொடங்கியதால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரைப்போல் ஆகலாம் என அனைவரும் நினைப்பது தவறு. தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அ.தி.மு.க.,வின் தலைமையை ஏற்றால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் பல தேர்தல்களை கண்ட தளபதிகள். அதனால் வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்றார்.

