நடுத்தெருவில் நிற்க போகும் காங்கிரஸ்: வேலுாரில் அண்ணாமலை சாபம்
நடுத்தெருவில் நிற்க போகும் காங்கிரஸ்: வேலுாரில் அண்ணாமலை சாபம்
UPDATED : ஜன 03, 2026 02:44 AM
ADDED : ஜன 03, 2026 02:34 AM

வேலுார்: ''வருகிற சட்டசபை தேர்தலுக்குப் பின் தமிழக காங்கிரசார் நடுத் தெருவில் நிற்பர்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
வேலுார், ஸ்ரீ நாராயணி பீடம் 50வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கஞ்சா புழக்கத்திற்கு, மத்திய அரசுதான் காரணம் என்கிறார்.
இப்படியெல்லாம் சொல்வதற்கு பதில், காவல் துறையை என்னால் நிர்வகிக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறிவிடலாம். தன் தோல்வியை முதல்வர் ஒப்புக் கொண்டால், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை சொல்கிறேன்.
தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன. இரு கோஷ்டியினரும் மாறி மாறி ஜால்ரா போடுகின்றனர். தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை. காங்கிரஸ், விஜயோடு கூட்டணியாகச் சென்றால், சிதம்பரம் புதிய கட்சி ஆரம்பித்து, தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பார் என சொல்கின்றனர். காங்கிரஸ் அழியும் கட்சி; அதற்கு தமிழக காங்., தலைவரே சான்று.
வரும் சட்ட சபைத் தேர்தலுக்குப் பின், தமிழக காங்கிரசார் நடுத்தெருவில் நிற்பர். 'சீட்' கேட்பது மட்டுமல்ல; பண பேரமும் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

